இரண்டு மில்லியன் மக்களை கொவிட்-19 சோதனைக்கு உட்படுத்த ஐக்கிய அரபு அமீரகம் திட்டம்!

இரண்டு மில்லியன் மக்களை கொவிட்-19 சோதனைக்கு உட்படுத்த ஐக்கிய அரபு அமீரகம் திட்டம்!

அடுத்த இரண்டு மாதங்களில் இரண்டு மில்லியன் மக்களை கொரோனா வைரஸ் (கொவிட்-19) சோதனைக்கு உட்படுத்த, ஐக்கிய அரபு அமீரகம் திட்டமிட்டுள்ளது.

முடக்கநிலை கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொற்று வீதம் மீண்டும் உயர்ந்ததன் பின்னணியில், இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

அரசாங்க செய்தித் தொடர்பாளர் அம்னா அல்-ஷம்ஸி இதுகுறித்து கூறுகையில், ‘கடந்த சில நாட்களில் தொற்றுகளில் சிறிதளவு அதிகரிப்பு காணப்படுவது கவலை அளிக்கும் அதே வேளையில், நாம் அனைவரும் பொறுப்பாகவும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றவும் உறுதியுடன் இருக்க வேண்டும் என்பதற்கான நினைவூட்டலாகும்.

ஐக்கிய அரபு அமீரக சுகாதார அதிகாரிகள் கொவிட்-19க்கான சோதனை திறனை தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர். எதிர்வரும் இரண்டு மாதங்களில் நாடு முழுவதும் கூடுதலாக 2 மில்லியன் சோதனைகள் செய்யப்பட உள்ளன’ என கூறினார்.

மார்ச் நடுப்பகுதியில் இருந்து நாடு தழுவிய ரீதியில் விதிக்கப்பட்ட முடக்கநிலை கட்டுப்பாடுகள் ஜூன் 24ஆம் திகதி நீக்கப்பட்டது. இது வணிக வணிகங்கள் மற்றும் பொது இடங்களை மீண்டும் திறப்பதற்கு வழிவகுத்தது.

தினசரி நோய்த்தொற்று வீதம் மே மாத இறுதியில் 900க்கும் அதிகமான உச்சநிலையிலிருந்து 300 முதல் 400 வரை குறைந்தது. ஆனால் வார இறுதியில் 700ஆக உயர்ந்தது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால் 52,068பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 324பேர் உயிரிழந்துள்ளனர்.