
நேற்று கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பிரதேசங்கள்
கொழும்பு நகரில் கொவிட் தொற்றுக்கு ஆளானோரின் மொத்த எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
நேற்றையதினம் அங்கு 646 பேருக்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்தமாக இதுவரையில் கொழும்பில் அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்து 383ஆக அதிகரித்துள்ளது.
அதேநேரம் கம்பஹா மாவட்டத்தில் 34 ஆயிரத்து 336 பேருக்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டிருப்பதுடன், நேற்று மாத்திரம் அங்கு 654 பேர் கொவிட் தொற்றுறுடன் அடையாளம் காணப்பட்டனர். நேற்று கம்பஹா மாவட்டத்திலேயே அதிகபடியான கொவிட் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
களுத்துறை மாவட்டத்தில் 281 பேருக்கும், கண்டியில் 114 பேருக்கும் நேற்று கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டது. குருணாகலில் 76 பேருக்கும், காலியில் 93 பேருக்கும், யாழ்ப்பாணத்தில் 148 பேருக்கும், கேகாலையில் 24 பேருக்கும், புத்தளத்தில் 75 பேருக்கும், அனுராதபுரத்தில் 31 பேருக்கும், மாத்தறையில் 14 பேருக்கும், பொலன்னறுவையில் 33 பேருக்கும், அம்பாறையில் 99 பேருக்கும், நுவரெலியாவில் 99 பேருக்கும், இரத்தினபுரியில் 27 பேருக்கும் நேற்று தொற்றுறுதியானது.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 10 பேருக்கும், பதுளையில் 39 பேருக்கும், மட்டக்களப்பில் 121 பேருக்கும், மொனராகலையில் 10 பேருக்கும், கிளிநொச்சியில் 49 பேருக்கும், முல்லைத்தீவில் 32 பேருக்கும், திருகோணமலையில் 50 பேருக்கும், மாத்தளையில் 40 பேருக்கும், வவுனியாவில் 60 பேருக்கும் மன்னாரில் 24 பேருக்கும் கொவிட் தொற்றுறுதியானதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தின், கொழும்பு மாநகர எல்லைக்கு உட்பட்ட பிரதேசத்தில் மாத்திரம் நேற்று 115 பேருக்கு கொவிட்19 தொற்றுறுதியானதுடன், பொரளையிலேயே அதிகபடியான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
பொரளையில் நேற்று 33 பேர் அடையாளம் காணப்பட்டதுடன், கொழும்பு கோட்டையில் 26 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர். அதேநேரம் கொழும்பின் தெஹிவளை, மொரட்டுவை மற்றும் கல்கிஸ்ஸை ஆகிய பகுதிகளில் நேற்று அதிக எண்ணிக்கையான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.