உலக சுகாதார நிபுணர்குழு விசாரணை நடத்த பச்சைக்கொடி காட்டியது சீனா

உலக சுகாதார நிபுணர்குழு விசாரணை நடத்த பச்சைக்கொடி காட்டியது சீனா

கொரோனா வைரஸ் தோன்றியமை குறித்து ஆய்வு நடத்த, உலக சுகாதார நிறுவனம் தனது நிபுணர்கள் குழுவை அனுப்ப சீனா சம்மதம் தெரிவித்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்டது. வுகான் நகரில் உள்ள உணவிற்கான உயிருடன் உள்ள விலங்குகள் மற்றும் பறவைகள் விற்பனை செய்யும் இடத்தில் இருந்து பரவியதாக சீனா தெரிவித்து வருகிறது.

வுகான் மாகாணத்தை தனிமைப்படுத்தி சீனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்தது. ஆனால் உலகின் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி இலட்சக்கணக்கான உயிர்களை பறித்து வருகிறது.

கொரோனா வைரஸ் இயற்கையாக தோன்றவில்லை. சந்தையின் அருகில் உள்ள ஆய்வகத்தில் இருந்து பரவியதாக பெரும்பாலான நாடுகள் குற்றம்சாட்டின. மேலும், உலக சுகாதார அமைப்பிற்கு சீனா சரியான தகவல்களை அளிக்கவில்லை. இது ஒரு தொற்று நோய் என சீனா அறிவிக்காமல் மறைத்து விட்டது என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

இந்த விஷயத்தில் உலக சுகாதார மையம் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளின் ஆதரவை இழந்துள்ளது. இதனால் தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் வெளிப்படையாக தெரிவிக்கப்படாமல் இருக்கிறது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் எப்படி உருவானது என்பதை கண்டறிய சீனாவுக்கு நிபுணர்கள் குழுவை அனுப்ப இருக்கிறோம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது. உலக சுகாதார அமைப்பின் முடிவுக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் சீனாவுடன் உலக சுகாதார அமைப்பு ஆலோசனை நடத்தியது.

தற்போது உலக சுகாதார அமைப்பு நிபுணர்கள் குழுவை அனுப்ப சீனா சம்மதம் தெரிவித்துள்ளது.