இலங்கை மீனவர்கள் இந்திய கடற்படையால் தாக்கப்படவில்லை - இந்திய உயர்ஸ்தானிகராலயம்

இலங்கை மீனவர்கள் இந்திய கடற்படையால் தாக்கப்படவில்லை - இந்திய உயர்ஸ்தானிகராலயம்

இலங்கை மீனவர்கள், இந்திய கடற்படையினரால் தாக்கப்பட்டிருப்பதாக வெளியான செய்தி முற்றுமுழுதாக உண்மைக்கு புறம்பானது என கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

வத்தளை - திக்ஓவிட்ட துறைமுகத்திலிருந்து, பலநாள் படகின் மூலம் கடந்த 7 ஆம் திகதி கடற்றொழிலுக்கு சென்ற 13 மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சர்வதேச கடல் எல்லையில் வைத்து இந்திய கடற்படையால் தாங்கள் தாக்கப்பட்டதாக குறித்த மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பேச்சாளரால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அவ்வாறான எந்த ஒரு சம்பவமும் இடம்பெறவில்லையென தாம் மிகவும் உறுதியாக தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளது.

மிகவும் உயர்ந்த ஒழுக்கத்தையும், தொழில்திறனையும், கடைப்பிடித்து வரும் இந்திய கடற்படை, குற்றமற்ற வகையில் தமது பொறுப்புக்களை நிறைவேற்றி வருகின்றது.

ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் இருதரப்பு பொறிமுறைகள் மற்றும் புரிந்துணர்வுகள் ஆகியவற்றின் ஊடாக இலங்கை இந்திய மீனவர்கள் சம்பந்தமான சகல பிரச்சனைகளுக்கும் ஒரு மனிதாபிமான அடிப்படையில் தீர்வினை காண்பதற்கு இந்தியா மிகுந்த உறுதிப்பாட்டுடன் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.