
உலகம் முழுவதும் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு - முக்கிய செய்திகளின் பார்வை
உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 33 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் குணமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 215க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இதனால் பெரும்பாலான நாடுகளில் முடக்கநிலை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சில நாடுகளில் முடக்கநிலை தளர்த்தப்பட்டும் வருகின்றது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றினால் 6,791,307 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 3,304,798 ஆக உயரந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 53,503 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில் கொரோனா தொற்றினால் உலகம் முழுவதும் 396,275 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.