
உணவு பொருட்களுக்கு புதிய வரி விதிக்கப்படவில்லை - நிதியமைச்சு விளக்கம்
சில உணவு பொருட்களுக்கு புதிய வரி விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்தி உண்மைக்கு புறம்பானதென நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
இது குறித்து நிதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி குறித்து தெளிவுப்படுத்தும் வகையில் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கடற்றொழில் அமைச்சின் பரிந்துரைகளுடன் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் கருவாடு மற்றும் நெத்தலி என்பவற்றுக்கு 100 ரூபா வரி விதிக்கப்பட்டு கடந்த பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி ஓகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி நிறைவடையவிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த வர்த்தமானியில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படாமல் அதனை நீட்டிப்பதற்கே ஆகஸ்ட் 11 ஆம் திகதி வர்த்தமானி வெளியிடப்பட்டதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
இதுதவிர இந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி நிறைவடையும் வகையில் கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானியும் அவ்வாறு நீட்டிக்கப்படும் என அறிவித்தே ஆகஸ்ட் 11 ஆம் திகதி வர்த்தமானி வெளியிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு உற்பத்திகள் பாதுகாக்கப்படும் வகையில் வெண்ணெய், குரக்கன் மா, வெந்தயம், கடுகு மற்றும் உப்பு என்பனவற்றிற்கு அதனூடாக விசேட வர்த்தக பொருட்களுக்கான வரி விதிக்கப்பட்டதாக நிதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.