இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக நாடு திரும்பியோர் கைது – தனிமைப்படுத்த உத்தரவு!

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக நாடு திரும்பியோர் கைது – தனிமைப்படுத்த உத்தரவு!

இந்திய முகாங்களில் தங்கிருந்து சட்டத்துக்குப் புறம்பாக படகுமூலம் யாழ்ப்பாணம் திரும்பிய நான்கு பேர் காங்கேசன்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்டனர் என்று கடற்படையினர் தெரிவித்தனர்.

அவர்கள் நான்கு பேரையும் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைப்பதற்கான அனுமதி மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் பெறப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

காங்கேசன்துறை கடற்பரப்பில் கடற்படையினர் இன்று (ஜூலை 11) சனிக்கிழமை காலை சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அதன்போது காங்கேசன்துறை கடற்பரப்பில் பயணித்த படகு ஒன்று சோதனையிடப்பட்டது.

அந்தப் படகில் படகு ஓட்டியுடன் நால்வர் பயணித்தனர். அவர்களில் இருவர் இந்திய முகாம்களிலிருந்து சட்டத்துக்கு புறம்பாக நாடு திரும்பியவர்கள் என்று விசாரணைகளில் தெரிய வந்தது.

நால்வரும் கைது செய்யப்பட்டு காங்கேசன்துறை பொலிஸார் மூலம் மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். நான்கு பேரிடமும் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படவேண்டிய நிலையில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைத்திருக்க நீதிமன்ற அனுமதி பெறப்பட்டது” என்றும் கடற்படையினர் தெரிவித்தனர்.