
உறுதியான நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் கொவிட்-19 தொற்று மோசமாகிக்கொண்டே போகும்: WHO எச்சரிக்கை
சில நாடுகளின் அரசுகள் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் இந்த தொற்று மேலும் மோசமாகிக்கொண்டே போகும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் ஆதனோம் கெப்ரியேசஸ் எச்சரித்துள்ளார்.
ஜெனீவாவில் நேற்று (திங்கட்கிழமை) நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலம் கூறுகையில்,
“இந்த தொற்றினைக் குறைப்பதற்கான நிரூபிக்கப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளாத நாடுகளில் அபாயகரமான அளவில் தொற்று அதிகரித்துக்கொண்டு செல்கின்றன. நான் குறிப்பாக கூற விரும்பவில்லை. நிறைய நாடுகள் தவறான பாதையில் செல்கின்றன.
இந்த வைரஸ் மக்களின் முதல் எதிரியாக இருக்கிறது. பல அரசுகளின், மக்களின் நடவடிக்கை இதைப் பிரதிபலிப்பதாக இல்லை. தலைவர்கள் மாற்றி மாற்றிப் பேசுவதால், இந்த உலகத் தொற்றை கட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகளில் மக்கள் நம்பிக்கை இழக்கிறார்கள்.
அடிப்படையான விடயங்களைப் பின்பற்றாவிட்டால், இந்த தொற்று ஒரே வழியில்தான் போகும். அதாவது மேலும் மேலும், மேலும், மேலும் மோசமாகும்” என கூறினார்.