அனைத்து தோட்ட தொழிலாளர் குடும்பங்களுக்கும் நிரந்தர வீட்டை நிர்மாணிக்க நிதி உதவி

அனைத்து தோட்ட தொழிலாளர் குடும்பங்களுக்கும் நிரந்தர வீட்டை நிர்மாணிக்க நிதி உதவி

மக்கள் தோட்ட அபிவிருத்தி சபைக்குட்பட்ட அனைத்து தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கும் காணி வழங்கும் திட்டம் மற்றும் வீடு நிர்மாணிப்பதற்கான நிதியுதவி வழங்கும் திட்டம் என்பன எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

கண்டி மாவட்டத்திற்குட்பட்ட 79 இந்து ஆலயங்களுக்கு தலா 50,000 ரூபா வீதம் நிதியுதவி வழங்கும் நிகழ்வு நேற்று நாவலப்பிட்டியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தின்போது 757 மில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்திய மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை, தற்போது இலாபகரமானதாக மாறியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு கிலோ தேயிலைக்கு வழங்கப்படும் கொடுப்பனவு 65 ரூபாவிலிருந்து 90 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மக்கள் தோட்ட வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை மற்றும் ஏனைய நிதிகளின் கீழ் வீடுகளை நிர்மாணிக்கும் பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.