
உய்குர் முஸ்லீம்கள் துன்புறுத்தப்படவில்லை: உறுதிப்படுத்த சீனா வருமாறு பொம்பியோவுக்கு அழைப்பு!
உய்குர் முஸ்லீம்கள் துன்புறுத்தப்படவில்லை என்பதை அறிந்துக் கொள்வதற்கு, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோவை நாட்டுக்கு வருமாறு சீனா அழைப்பு விடுத்துள்ளது.
சீனாவில் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிரான மனித உரிமை மீறல்களுக்கு காரணமானவர்களுக்கு, அமெரிக்க அரசு அண்மையில் சில தடையுத்தரவுகளை அறிவித்தது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவின் முக்கிய அரசியல் தலைவர்களுக்கு நாட்டுக்குள் நுழைய சீன அரசு தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
ஏற்கனவே கொரோனா வைரஸ் (கொவிட்-19) விவகாரத்தில் நீடித்துவரும் மோதலுக்கு இடையில், இந்த விடயமும் இருநாடுகளுக்கிடையில் விரிசலை அதிகரித்துள்ளது.
இந்தநிலையில், அமெரிக்காவை சவால் செய்யவோ அல்லது மாற்றவோ முயலவில்லை என்று சீனா மீண்டும் வலியுறுத்தியுள்ளது
இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹூவா சுனிங் கூறுகையில், ‘சீனா செய்யும் அனைத்தும் அச்சுறுத்தல் என்று அமெரிக்கா நினைத்தால், அத்தகைய அணுகுமுறை சுயமாக நிறைவேறும்.
பிராந்தியத்தின் உய்குர் முஸ்லீம் சிறுபான்மையினருக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் எதுவும் இல்லை என்பதைத் தெரிந்துகொள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோவை சீனாவுக்கு வந்து ஸின்ஜியாங்கைப் பார்வையிட அழைக்கின்றேன்’ என கூறினார்.
சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணங்களில் ஒன்றான ஸின்ஜியாங்கில் தனித்துவ அடையாளங்களோடு வாழும் உய்குர் இன மக்களில், இஸ்லாம் மார்க்கத்தை பின்பற்றுபவர்கள் பெருமளவில் உள்ளனர்.
இந்தநிலையில், உய்கர் இனத்தவர்கள், சீன அரசால் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவதாக சர்வதேச நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. எனினும் இதனை சீனா தொடர்ந்து மறுத்து வருகின்றது.