
இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவைக்கு மூன்று பில்லியன் பவுண்டுகள் ஒதுக்கீடு!
இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவைக்கு (என்.எச்.எஸ்) பிரதமர் பொரிஸ் ஜோன்சன், மூன்று பில்லியன் பவுண்டுகள் செலவிடவுள்ளார்.
இதுகுறித்து பிரதமரின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘இப்போது மனநிறைவுக்கான நேரம் அல்ல என்பதில் பிரதமர் தெளிவாக உள்ளார்.
எங்கள் தேசிய சுகாதார சேவை குளிர்காலத்திற்கு தயாராக உள்ளது என்பதை நாங்கள் உறுதி செய்ய வேண்டும்’ என கூறினார்.
சமீபத்திய வாரங்களில், நோய்த்தொற்று வீதங்கள் குறைந்துவிட்டதால் நாடு முடக்கநிலை கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. ஆனால் இப்போது குளிர்காலத்தில் இரண்டாவது அலைக்கு தயாராக இருக்க வேண்டுமென்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.
அரசு நிதியளிக்கும் சுகாதார முறைமைக்கான 3 பில்லியன் பவுண்டுகள் பண ஊக்கமானது, உடனடியாக வழங்கப்படும்.
மேலும், தனியார் மருத்துவமனைகள் மற்றும் தற்காலிக கள மருத்துவமனைகளின் பயன்பாடு மார்ச் வரை அனுமதிக்கப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் மொத்த வருடாந்திர தேசிய சுகாதார சேவை நிதி, 115 பில்லியன் பவுண்டுகளை தாண்டியுள்ளது.
இந்த நிதி அறிவிப்பு இங்கிலாந்து சுகாதார சேவைக்கு மட்டுமே பொருந்தும். ஸ்கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்திற்கு பின்னர் அறிவிக்கப்படும்.