புதிய முடக்கநிலை அதிகாரங்களை பெறும் இங்கிலாந்தின் உள்ளூராட்சி சபைகள்!

புதிய முடக்கநிலை அதிகாரங்களை பெறும் இங்கிலாந்தின் உள்ளூராட்சி சபைகள்!

இங்கிலாந்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளுக்கு (Local Councils) நாளை (சனிக்கிழமை) முதல் உள்ளூர் பகுதிகளை முடக்குவதற்கு புதிய அதிகாரங்கள் வழங்கப்படும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.

இதன்படி, கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவலை சமாளிக்க உள்ளூர் அதிகாரிகளுக்கு புதிய அதிகாரங்கள் இருக்கும். இதில் குறிப்பிட்ட வளாகங்களை மூடுவது, வெளிப்புற இடங்களை மூடுவது மற்றும் நிகழ்வுகளை இரத்து செய்வது ஆகியவை அடங்கும்.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பப்கள், அருந்தகங்கள், கடைகள் மற்றும் உணவகங்களை மூடுமாறு உரிமையாளர்களை கட்டாயப்படுத்தவும் அவர்களுக்கு அதிகாரம் உண்டு.

அத்துடன், அடுத்த மாதத்திலிருந்து உள்ளூர் தொற்றுகள் இருக்கும் இடங்களில் ‘தங்குமிடத்தில் உத்தரவுகளை’ அரசாங்கம் வெளியிடும் என்றும் பிரதமர் தெரிவித்தார். இவை வரையறுக்கப்பட்ட பகுதிகளை விட்டு வெளியேறுவதை தடுக்கும் மற்றும் தொற்று வீதங்கள் குறையும் வரை பொது போக்குவரத்து பயன்பாட்டை கட்டுப்படுத்தும்.

இதுகுறித்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் மேலும் கூறுகையில், ‘உள்ளூர் அதிகாரிகளுக்கு அதிக அதிகாரங்கள், எங்கே மிக முக்கியமாக தொற்று பரவல் உள்ளதோ, அங்கு விரைவாக செயற்பட உதவும்’ என கூறினார். இதனை பிரதமர் ‘மின்னல் முடக்கநிலை’ என விபரித்தார்.

மேலும், ‘உள்ளூராட்சி சபைகளின் நடவடிக்கை எப்போதுமே போதுமானதாக இருக்காது. உள்ளூர் மட்டத்தில் மத்திய அரசு எவ்வாறு திறம்பட தலையீடு செய்ய முடியும் என்பது குறித்த வரைவு விதிமுறைகளை அடுத்த வாரம் வெளியிடுவோம்.

நியாயமான சான்றுகள் இருந்தால், அமைச்சர்கள் ஒரு பகுதியில் முழுத் துறைகளையும் அல்லது வளாகங்களையும் மூடவும், உள்ளூர் தங்குமிட உத்தரவுகளை அறிமுகப்படுத்தவும், வரையறுக்கப்பட்ட பகுதிகளுக்குள் நுழைவதை அல்லது வெளியேறுவதைத் தடுக்கவும், தேசிய வரையறுக்கப்பட்ட விதிகளுக்கு அப்பாற்பட்ட கூட்டங்களின் அளவைக் குறைக்கவும் முடியும் அல்லது உள்ளூர் பகுதிகளுக்கு சேவை செய்யும் போக்குவரத்து அமைப்புகளை கட்டுப்படுத்த முடியும்’ என கூறினார்.