அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்கும் அரச பணியாளர்கள் மாத்திரம் இன்று கடமைக்கு!
அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு அவசியமான பணியாளர்கள் தவிர்ந்த ஏனைய அரச பணியாளர்கள், இன்றைய தினம் கடமைக்கு சமுகமளிக்க வேண்டிய அவசியமில்லை என பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.
எனினும், அவசர மற்றும் அத்தியாவசிய கடமைகளுக்காக, நிறுவன பிரதானியினால் பணியாளர்களை சேவைக்கு அழைப்பதற்கு தடை இல்லை என்றும் அந்த அமைச்சு அறியப்படுத்தியுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி மற்றும் போக்குவரத்து சிக்கல் நிலை என்பனவற்றைக் கருத்திற்கொண்டு, அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் நாடாளுமன்றில் அறிவித்தல் ஒன்றை வெளியிட்ட நிலையில், அது குறித்த சுற்றறிக்கையை வெளியிட அரச சேவைகள் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி நடவடிக்கை எடுத்துள்ளார்.