
ட்ரம்பின் அசட்டையீனத்தால் கொல்லப்படும் அமெரிக்க மக்கள்!
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பாக உலக நாடுகள் அறிவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு இவ்விடயம் தொடர்பாக எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளதாக நிபுணர்களின் அறிக்கை தெரிவிக்கின்றது.
கடந்த வருடம் டிசம்பர் மாதத்தின் இடைப்பகுதியில் சிலர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டனர். எனினும் டிசம்பர் இறுதியிலேயே வைரஸ் தொற்று பற்றி உலக சுகாதார அமைப்புக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்று டிசம்பரில் பாதிப்புகளை ஏற்படுத்தி, அது வெளியே தெரிவதற்கு 3 மாதங்களுக்கு முன்பே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு இதுபற்றி நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியின் நிர்வாகத்தில் பொருளாதார ஆலோசகர்கள் குழுவின் தலைவராக, 3 வருடங்களாக தோடாஸ் பிலிப்சன் பதவி வகித்தவர்.
இவரது தலைமையிலான குழுவின் 41 பக்க அறிக்கை ஒன்று கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெள்ளை மாளிகைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையிலேயே உலக அளவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்த கூடிய தொற்று நோய் வரவிருக்கும் நாட்களில் பரவ கூடிய ஆபத்து உள்ளது என கூறப்பட்டுள்ளது.
மேலும் குறித்த வைரஸ் தொற்றினால் 05 இலட்சத்துக்கு மேற்பட்ட அமெரிக்கர்கள் உயிரிழக்க கூடிய சூழ்நிலை காணப்படுகிறது. இதனால் அமெரிக்க பொருளாதாரத்திலும் 3,700 கோடி அமெரிக்க டொலர் மதிப்பிலான பாதிப்பு ஏற்பட கூடும் என்றும் அவ்வறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த நிபுணர்களின் அறிக்கையை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கண்டுக்கொள்ளவில்லை. இதனால்தான் அமெரிக்கா பெரும் பாதிப்புக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளதாக பரவலாக பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.