கனடாவில் இலங்கை தமிழ் பெண் சுட்டுக்கொலை -வழக்கில் திடீர் திருப்பம்...
கனடாவின் ஒன்ராறியோவில் இலங்கை பெண்மணி ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட வழக்கில், அவரது கணவன் உட்பட மூவர் குற்றவாளி என ரொறன்ரோ நடுவர் நீதிமன்றம் கண்டுபிடித்துள்ளது.
ஸ்கார்பரோ பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த சூட்டு சம்பவம் நடந்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட நிலையில் 38 வயதான தீபா சீவரத்தினம் என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் மூவர் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இரண்டு பிள்ளைகளுக்கு தாயாரான தீபா சீவரத்தினம் துப்பாக்கியால் பலமுறை சுடப்பட்டு ஸ்கார்பரோ பகுதியில் அமைந்துள்ள அவரது குடியிருப்பின் முற்றத்தில் சடலமாக கிடந்தார்.
சம்பவத்தன்று, மார்ச் 13ம் திகதி கொலைகாரன் வீட்டின் அழைப்பு மணியை அழுத்தவும் தீபாவின் தாயார் லீலாவதி சீவரத்தினம் கதவை திறந்துள்ளார். அவரும் துப்பாக்கி குண்டுக்கு இலக்காக, சிகிச்சைக்கு பின்னர் உயிர் தப்பினார்.
இந்த வழக்கில் தீபாவின் கணவர் விஜேந்திரன் பாலசுப்ரமணியம் மீது கொலைக்குற்றம் சுமத்தப்பட்டது. இந்த நிலையில், இரண்டு நாட்கள் விசாரணைக்கு பின்னர், விஜேந்திரன் பாலசுப்ரமணியம் தான் இந்த கொலைக்கு திட்டமிட்டதும் செயல்படுத்தியதும் என நடுவர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உறுதி செய்துள்ளது.