பணத்துக்காக கொலையில் ஈடுபடும் வாடகைக் கொலையாளி ஒருவர் கைது...
பணத்துக்காக கொலைக்குற்றங்களில் ஈடுபட்ட வாடகைக் கொலையாளி ஒருவர் மொரட்டுவை பிரதேசத்தில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம் (24.06.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மொரட்டுவை பிரதேசத்தில் பாதாள உலகக்கும்பல் அங்கத்தவர் ஒருவரின் கொலை சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்திருந்தனர்.
இந்நிலையில் குறித்த கொலையுடன் தொடர்புடைய வாடகைக் கொலையாளி ஒருவர் நேற்று பொலிஸாரிடம் சிக்கியுள்ளார்.
இதன்போது சந்தேகநபரிடமிருந்து 05 பாரிய கத்திகள், 03 வாள்கள் மற்றும் ஒரு கூரான கத்தி என்பன மொரட்டுவ பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன் சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, அவர் வாடகை கொலையாளி என தெரியவந்துள்ளதுடன் சந்தேகநபர் மொரட்டுவ, ராவதாவத்தை பிரதேசத்தை சேர்ந்த (30) வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய பொலிஸார் சந்தேகநபரை இன்று (25.06.2023) மொரட்டுவ நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளனர்.