லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு.!
லிட்ரோ எரிவாயு விலையை ஒரே விலை வரம்பிற்குள் தொடர்ந்து வைத்திருக்க எதிர்ப்பார்த்துள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் லிட்ரோ எரிவாயு லங்கா நிறுவனம் திறைசேரிக்கு ஈவுத் தொகையாக 1.5 பில்லியன் ரூபாவை வழங்கவுள்ளதாகவும், குறித்த தொகையை தமது தாய் நிறுவனமான இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் ஊடாக இன்று (20.07.2023) திறைசேரிக்கு வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் அதிகளவில் எரிவாயுவிற்கான விலைக் குறைப்புகளைச் செய்துள்ளோம். இந்த விலைகளை ஒரே விலை வரம்பிற்குள் தொடர்ந்து வைத்திருக்க எதிர்ப்பார்த்துள்ளோம்.
அதற்கு நாங்கள் பல முறைகளைப் பயன்படுத்துகிறோம். நானும் எனது குழுவும் விசேட கவனம் செலுத்துகிறோம்.
குறிப்பாக, விலை சூத்திரத்தின்படி பெறப்படும் விலைகளுக்கு அமைய, உலகச் சந்தையின் விலை ஏற்ற இறக்கம் குறித்து தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம்.

வருங்காலங்களில் பார்க்கலாம். சிலிண்டர்களின் விலையை இந்த விலை வரம்பிற்குள் வைத்திருப்பதே எமது நோக்கம் என சுட்டிக்காட்டியுள்ளார்