மாணவனை வன்புணர்வுக்குட்படுத்திய ஆசிரியர் தலைமறைவு - அம்பாறையில் சம்பவம்..!
அம்பாறையில் பாடசாலை ஒன்றில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மாணவன் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர் தலைமறைவாகியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பகுதியில் உள்ள பிரபல அரச பாடசாலை ஒன்றில் தரம் 9 இல் கல்வி கற்கும் குறித்த மாணவன் கடந்த மாதம் 19ஆம் திகதி உடற்கல்வி ஆசிரியரால் விளையாட்டு அறையில் வைத்து பாலியல் ரீதியாக துஸ்பிரயோக முயற்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் இடம்பெற்று மறுநாள் பாதிக்கப்பட்ட குறித்த மாணவன் அதிபரிடம் முறையிட்டுள்ளதுடன் இதுவரை இரு வாரங்கள் கழிந்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் மூடி மறைப்பதற்கான முழு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாணவனின் தாய் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து இச் சம்பவம் குறித்து நிந்தவூர் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து காவல்துறையினர் பாதிக்கப்பட்டுள்ள தனது மகனிடம் வாக்குமூலம் ஒன்றை இரு தடவை பெற்று சென்றுள்ளதாகவும் மாணவனை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சி செய்ததாகக் கூறப்படும் சந்தேக நபரான ஆசிரியர் தொடர்ந்தும் தலைமறைவாகி உள்ளதாக தாயார் குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பில் எந்த தரப்பினரும் எமக்கு உதவவில்லை என பாதிக்கப்பட்ட மாணவனின் தாயார் கண்ணீர் மல்க ஊடகங்களிடம் தெரிவித்தார்.