சிறிலங்கா கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்கள்!!
சிறிலங்கா கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்களை சிறிலங்கா கடற்படையினர் இன்று(07) காலை கைதுசெய்தனர்.
முல்லைத்தீவு அலம்பில் கடற்பரப்பில் வைத்தே மீனவர்களையும் அவர்கள் பயன்படுத்திய இழுவைப்படகையும் கடற்படையினர் கைது செய்தனர்.
சிறிலங்கா கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களும், அவர்கள் பயன்படுத்திய படகும் திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன் சிறிலங்கா கடலோர காவற்படை ஊடாக மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்றொழில் உதவி இயக்குநரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.
2023 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சிறிலங்கா கடற்படையினர் 93 இந்திய மீனவர்களையும் 14 இந்தியப் படகுகளையும் கைது செய்துள்ளனர்.
இவ்வாறான செயற்பாடுகளால் உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் நாட்டின் கடல் வளங்களில் ஏற்படும் பாதிப்புக்களைக் கருத்தில் கொண்டு, கடற்படையினர் தொடர்ந்தும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.