மரம் முறிந்து வீழ்ந்தமையால் மலையகத்தில் புகையிரத சேவைகள் தடை!!
நேற்று(16) காலை மரம் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக மலையகப் பாதையில் புகையிரத சேவைகள் தடைப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இஹல கோட்டே மற்றும் பலான புகையிரத நிலையங்களுக்கு இடையில் தண்டவாளத்தின் குறுக்கே மரம் ஒன்று வீழ்ந்துள்ளதால் குறைந்தது 7 புகையிரதங்கள் கால அட்டவணையை தாமதமாக இயக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போதைக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து புறப்படும் புகையிரதங்கள் ரம்புக்கனை புகையிரத நிலையம் வரை மாத்திரம் பயணிக்கும் மற்றும் பதுளை புகையிரத நிலையத்தில் இருந்து புறப்படும் புகையிரதங்கள் கடுகன்னாவ புகையிரத நிலையத்தில் நிறுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், தண்டவாளத்தில் விழுந்த மரத்தை அகற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ள புகையிரத திணைக்களம், புகையிரத சேவைகள் மீள ஆரம்பிக்க பல மணித்தியாலங்கள் ஆகலாம் எனவும் தெரிவித்துள்ளது.