பக்கத்து வீட்டில் திருட முயன்றவர் படுகாயம்.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள புதூரில் திருடன் ஒருவன் அவனது பக்கத்து வீட்டில் திருட முற்பட்ட வேளை மரத்தில் இருந்து கீழே வீழ்ந்து காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வியாழக்கிழமை (31) மாலை திருடன் வீட்டின் கூரையை உடைத்து திருடமுற்பட்ட வேளை, திருடனை கண்டு வீட்டில் உள்ளவர்கள் சத்தமிட்டுள்ளனர்.
இந்நிலையில், திருடன் அங்கிருந்து தப்பி ஓடுவதற்காக கூரையில் இருந்து அருகிலுள்ள மரத்தில் பாய்ந்து ஏறி ஒழித்துக் கொண்டான். திருடனை பிடிப்பதற்காக அயலவர்கள் ஒன்றிணைந்ததையடுத்து திருடன் அங்கிருந்து தப்பி ஓடுவதற்காக முயற்சித்தார்.
இதன்போது கீழே வீழ்ந்து கால் இரண்டாக உடைந்துள்ளது. இதனையடுத்து, அயலவர்கள் திருடனை பிடித்து வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.