
யாழில் உறவினர் வீட்டுக்கு சென்று திரும்பியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.
யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் வீடு உடைத்து சுமார் 7 லட்சம் பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் இருவரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றின் உரிமையாளர் குடும்பத்துடன், கடந்த சில தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்புக்கு சென்று இருந்தார்.
ஒரு சில நாட்கள் மட்டக்களப்பில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த பின்னர் யாழ்ப்பாணத்தில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பிய வேளை வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டிருந்தது.
வீட்டில் இருந்த மின் மோட்டார், தொலைக்காட்டி பெட்டி, மடிக்கணனி, கையடக்க தொலைபேசி உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தமை வீட்டினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இதனையடுத்து கொள்ளைச்சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) சுன்னாகம் மற்றும் உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த மூன்று இளைஞர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த வீட்டில் இருந்து திருடப்பட்ட பொருட்களை மீட்டுள்ளதாகவும், அவற்றின் பெறுமதி சுமார் 07 இலட்ச ரூபாய் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேகநபர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.