யாழில் நூதனமான முறையில் திருடிய இருவர் கைது..!

யாழில் நூதனமான முறையில் திருடிய இருவர் கைது..!

யாழ்ப்பாணம், கந்தர்மடம் பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் பொலிஸார் என்று தங்களை அறிமுகப்படுத்தி பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் இன்றையதினம் (19.10.2023) கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம், கந்தர்மடம் பகுதியில் உள்ள கடை ஒன்றுக்குள் நேற்று (18.10.2023) நுழைந்த சிலர் தங்களைப் பொலிஸார் என்று அறிமுகப்படுத்தியுள்ளனர்.

பின்னர் கடையில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுகின்றது என்று தகவல் கிடைத்துள்ளது என்றும் தேடுதல் நடத்த வேண்டும் என்றும் கூறி அங்கு தேடுதல் நடத்தியுள்ளனர்.

யாழில் நூதனமான முறையில் திருடிய இருவர் கைது | Two People Arrested For Stealing

இந்நிலையில் கடையில் இருந்த 23 ஆயிரம் ரூபா பணத்தை எடுத்துக் கொண்டு, கடையிலிருந்தவர்களை மிரட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் இன்று இருவரைக் கைது செய்தனர்.

மேலும் கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.