கொவிட்-19 எதிரொலி: பொலிவியாவில் பொதுத் தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு!

கொவிட்-19 எதிரொலி: பொலிவியாவில் பொதுத் தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு!

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் நடைபெறவிருந்த பொதுத் தேர்தல், மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக செப்டம்பர் 6ஆம் திகதி நடைபெறவிருந்த தேர்தல் தற்போது, ஒக்டோபர் 18ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பொலிவியாவின் உச்ச தேர்தல் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.

பொலிவியாவின் உச்ச தேர்தல் தீர்ப்பாயத்தின் தலைவர் சால்வடார் ரோமெரோ இதுகுறித்து கூறுகையில், “சட்டத்தின் தேவையை மதித்து, தேர்தல் செயல்முறை விஞ்ஞான தரங்களை கணக்கில் எடுத்துக்கொள்வதோடு, சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றுகிறது. 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான வாக்களிக்கும் திகதியை 2020ஆம் ஆண்டு ஒக்டோபர் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நிர்ணயிக்க உச்ச தேர்தல் தீர்ப்பாயம் முடிவு செய்துள்ளது” என கூறினார்.

கொவிட்-19 தொற்று பரவல் காரணமாக, தேர்தல் ஒத்திவைக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும்.

தொற்றுநோய் காரணமாக மே 3ஆம் திகதி நடைபெறவிருந்த பொதுத் தேர்தல் நிறுத்தி வைப்பதாக மார்ச் 21ஆம் திகதி டி.எஸ்.இ அறிவித்தது. சில நாட்களுக்குப் பிறகு, நாட்டின் தேர்தல் அமைப்பு செப்டம்பர் 6ஆம் திகதி தேர்தலை நடத்துவதாக அறிவித்தது.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம், தேர்தல் இரத்து செய்யப்பட்டதிலிருந்து பொலிவியாவில் ஜனாதிபதி, துணைத் தலைவர், பிரதிநிதிகள் மற்றும் செனட்டர்களுக்கான தேர்தல்கள் நிலுவையில் உள்ளன, தொடர்ந்து நான்காவது முறையாக வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட ஈவோ மோரலஸ், மோசடி குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

அண்மையில் நாட்டின் இடைக்கால ஜனாதிபதியான ஜீனைன் ஏயெஸ்க்கு கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டார்.

முன்னதாக பொலிவியாவில் சுகாதாரத்துறை அமைச்சர் உட்பட 7 அமைச்சர்கள் ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

தென்அமெரிக்க நாடான பொலிவியாவில், இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால், 65,252பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 2,407பேர் உயிரிழந்துள்ளனர்.