
மரண பீதியை காட்டிய அமெரிக்க போர் விமானம்!
டெஹ்ரானிலிருந்து பெய்ரூட்டுக்குப் பறந்த ஈரான் பயணிகள் விமானத்துக்கு அருகில் அமெரிக்க போர் விமானம் பறந்து அச்சுறுத்தியதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி தகவல் வெளியிட்டுள்ளது.
ஆனாலும் விமானம் பாதுகாப்பாக லெபனான் தலைநகரில் இறங்கியது என்று அந்தத் தொலைக்காட்சி செய்தி தெரிவிக்கிறது.
அமெரிக்க அதிகாரி ஒருவர் அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்துக்கு இந்தத் தகவலை உறுதி செய்தார், அப்போது ஈரான் விமானத்துக்கு கொஞ்சம் தொலைவில் பாதுகாப்பான தூரத்தில் அமெரிக்கப் போர் விமானம் பறந்தது என்றார்.
லெபனான் விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறும்போது, மஹன் ஏர் பிளைட் 1152 என்ற விமானம் பெய்ரூட்டில் பாதுகாப்பாக இறங்கியதாகத் தெரிவித்தார்.
ஆனால் இந்தச் சம்பவம் குறித்து பலதரப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலில் ஈரான் இஸ்ரேலை குற்றம்சாட்டியது. தென்மேற்கு சிரியாவின் வானில் அல் டான்ஃப் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத 2 அமெரிக்க ஜெட்கள் ஈரான் பயணியர் விமானத்தை அச்சுறுத்தியதாக சிரியா அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
ஆனால் இஸ்லாமிக் ஸ்டேட் பயங்கரவாத அமைப்புடன் சண்டையிட்டு வரும் அமெரிக்க படைகள் 2016 முதல் அல் டான்ஃப் பகுதியில் நிலைகொண்டுள்ளது என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் அமெரிக்க போர் விமானம் ஈரான் பயணியர் விமானத்திற்கு இடையூறு விளைவித்ததால் பைலட் தன் விமானம் பறந்த உயரத்தை மாற்ற வேண்டியதாயிற்று. கொஞ்சம் தாழ்வாகப் பறக்க நேரிட்டதில் சில பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
அமெரிக்க போர் விமானங்கள் 100 மீ தொலைவில் ஈரான் பயணியர் விமானத்திற்கு இடையூறு செய்ததாக ஈரான் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து ஈரான் விமானம் தாழ்வாகப் பறந்து மோதலைத் தவிர்த்ததாக தெரிகிறது அமெரிக்க நேவி கேப்டன் பில் அர்பன் என்பவர் இது தொடர்பில் தெரிவிக்கையில், அமெரிக்க எஃப்-15 ரக பொர் விமானம் வழக்கமான முறையில்தான் மஹன் ஏர் பயணிகள் விமானத்தைக் காண்காணித்தது, 1000 மீட்டர்கள் தள்ளித்தான் பறந்தது என்றார்.
இதில் விபத்து நேர்ந்திருந்தால் மக்கள் உயிருக்கு அமெரிக்காதான் பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என்று ஈரான் கடுமையாக சாடியுள்ளது.