
அமெரிக்காவுக்கு சீனா பதிலடி: செங்டூவில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தை மூட உத்தரவு!
தென்மேற்கு நகரமான செங்டூவில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தை மூட சீனா உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு சொந்தமான அறிவுச் சொத்துகளை சீனா திருடுவதால் 72 மணித்தியாலத்திற்குள் ஹூஸ்டனில் உள்ள சீனத் துணைத் தூதரகம் மூடப்பட வேண்டுமென அமெரிக்கா உத்தரவிட்ட ஒருநாளுக்கு பிறகு இந்த உத்தரவை சீனா பிறப்பித்துள்ளது.
வர்த்தகப் போர், கொரோனா தொற்று, ஹொங்கொங் தொடர்பான சர்ச்சைக்குரிய பாதுகாப்பு சட்டத்தை சீனா நிறைவற்றியது உள்ளிட்ட பிரச்சனைகளில், அமெரிக்கா சீனா இடையேயான தொடர்ந்து பதற்றம் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இதனிடையே சீனாவின் இந்த உத்தரவு மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இதுகுறித்து சீனாவின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த மூடல் அமெரிக்கா எடுத்த நியாயமற்ற நடவடிக்கைகளுக்கு முறையான மற்றும் தேவையான பதில்.
சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான தற்போதைய நிலைமை சீனா பார்க்க விரும்பாத ஒன்று, அதற்கான அனைத்துப் பொறுப்பையும் அமெரிக்காவையே சேரும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1985ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட மற்றும் தற்போது 200க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட செங்டுவில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம், திபெத்தின் தன்னாட்சி பிராந்தியத்திற்கு அருகாமையில் இருப்பதால் இந்த தூதரகம், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்தது என்று நிருபர்கள் கூறுகின்றனர்.