
குழந்தைகளை தவிக்கவிட்டு சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற தம்பதி; நேர்ந்த கதி
எட்டு, ஐந்து மற்றும் மூன்று வயதுடைய குழந்தைகளை விட்டுவிட்டு சிவனொளிபாதமலை யாத்திரை சென்ற தம்பதியினர் குளியாப்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குருநாகல் பிரதேசத்தில் தங்கள் மூன்று குழந்தைகளை தனியாக வீட்டில் விட்டுவிட்டு யாத்திரை சென்ற தம்பதிகளே கைதாகியுள்ளனர்.
இந்த சம்பவமானது நேற்று இடம்பெற்றதாக கூறப்படும் நிலையில், சம்பவம் தொடர்பில் டீகல்ல, எலத்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதியரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாரின் அவசர சேவைப் பிரிவினருக்குத் தகவல் கிடைத்ததையடுத்து, தம்பதிகளின் வீட்டிற்கு சென்ற பொலிஸார் , கதவு பூட்டப்பட்டிருந்த வீட்டைச் சோதனையிட்ட போது மூன்று குழந்தைகளும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்ததைக் கண்டுள்ளனர்.
மீட்கப்பட்ட குழந்தைகளை பொலிஸார் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வீட்டில் பிஸ்கட் போன்றவற்றை குழந்தைகள் உண்பதற்காக வைத்துவிட்டு மற்றுமொரு குழுவினருடன் புனித யாத்திரை சென்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்துடன் யாத்திரை முடிந்தவுடன் அந்த தம்பதியினர் உடனடியாக கைது செய்யப்பட்ட நிலையில், குழந்தைகளின் பாதுகாப்பு கருதி வைத்தியசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.