
பாதுகாப்பு கொள்கை மறுஆய்வில் விண்வெளி பாதுகாப்பு குறித்தும் கவனம்- பிரித்தானியா
அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் நட்பு நிலையற்ற வெளிநாடுகள் குறித்த பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கொள்கை மறுஆய்வின் ஒரு பகுதியாக விண்வெளி பாதுகாப்பு குறித்தும் கவனம் செலுத்தப்படவுள்ளதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.
விண்வெளியில், ரஷ்யா மற்றும் சீனா முன்வைக்கும் அச்சுறுத்தல்களைக் கையாளும் திறனை பிரித்தானியா அதிகரிக்கும் என பாதுகாப்புச் செயலாளர் பென் வாலஸ் (Ben Wallace) தெரிவித்துள்ளார்.
மேலும், “விண்வெளியை அமைதியான முறையில் பயன்படுத்தும் நடவடிக்கையை அச்சுறுத்தும் வகையில் செயற்கைக்கோளில் இருந்து ஆயுதம் போன்ற பொருளை ரஷ்யா பரிசோதித்துள்ளது.
இவ்வாறு சீனாவும் விண்வெளியில் தாக்குதல் நடத்தக்கூடிய ஆயுதங்களை உருவாக்கி வருகிறது. இரு நாடுகளும் தங்கள் திறன்களை மேம்படுத்துகின்றன.
இத்தகைய செயற்பாடு, அரசாங்கம் தற்போது முன்னெடுத்துவரும் பாதுகாப்பு மதிப்பாய்வின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
ரஷ்யா சமீபத்தில் விண்வெளியில் செயற்கைக் கோள்களை அழிக்கும் எதிர்ப்பு ஆயுதங்களை பரிசோதித்ததாக அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் குற்றஞ்சாட்டின.
இந்நிலையில், கடந்த ஜூலை 15ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் ஏனைய விண்கலங்களுக்கு அச்சுறுத்தலை உருவாக்கவில்லை எனவும் சர்வதேச சட்டத்தை மீறவில்லை எனவும் அமைச்சகம் சுட்டிக்காட்டியிருந்தது.
இதனைவிட, ரஷ்ய விண்வெளி உபகரணங்கள் குறித்து சோதனை செய்ய புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாக அந்நாடு முன்னர் அறிவித்திருந்தது.
எனினும், அமெரிக்காவும் பிரித்தானியாவும் ரஷ்யாவின் இந்த தொழில்நுட்பம் விண்ணில் சுற்று வட்டப்பாதையில் இருக்கும் செயற்கைக் கோள்களை இலக்கு வைக்கும்படியான ஏவுகணை போன்ற ஆயுதம் ஒன்றே என தெரிவித்த நிலையில் விண்வெளி பாதுகாப்பு குறித்த கேள்வி அமெரிக்கா, பிரித்தானியா இடையே ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது