யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலே சர்வதேச தாய்மொழித் தினம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலே சர்வதேச தாய்மொழித் தினம்

பெப்ரவரி 21 உலகளாவிய ரீதியில் தாய்மொழித் தினமாக கொண்டாடப்படுகிற நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் ஆங்கிலத் துறையினர் பெப்ரவரி 20 மற்றும் பெப்ரவரி 21 ஆகிய தினங்களில் சில சிறப்பு நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளனர்.

நாளை செவ்வாய்க்கிழமை(20) காலை ஒன்பது மணியில் இருந்து பிற்பகல் நான்கு மணி வரை ‘லிங்குவா 2024’ எனத் தலைப்பிடப்பட்ட “மொழி: தேசத்திற்கு உள்ளும் அப்பாலும்” என்ற கருப்பொருளிலே வடிவமைக்கப்பட்ட கண்காட்சி ஒன்று கலைப்பீடத்தின் வாயிற்கூடத்திலே இடம்பெறும். இந்தக் கண்காட்சியினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சிறீசற்குணரஜா ஆரம்பித்து வைப்பார்.

புதன்கிழமை (21)காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கலைப்பீடக் கருத்தரங்கு மண்டபத்தில் இடம்பெறும் கருத்தரங்கிலே மொழியியல் ஆங்கிலத்துறையின் தலைவர் கவிதா நவகுலன், கலைப் பீடாதிபதி பேராசிரியர் ரகுராம் ஆகியோர் ஆரம்ப உரைகளை நிகழ்த்துவர்.

அன்றைய நிகழ்வின் திறப்புரையினை அமெரிக்காவின் சிக்காக்கோ பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த பேராசிரியர் அண்ணாமலை நிகழ்நிலையில் ஆற்றுவார். அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் இருக்கும் இந்தியத் துணைத் தூதரகத்தின் துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினர் உரையினையும், மொழியியல் ஆங்கிலத்துறையில் கடமையாற்றும் பேராசிரியர் சுபதினி ரமேஷ் மற்றும் சிரேஸ்ட விரிவுரையாளர்  சாமிநாதன் விமல் ஆகியோர் சிறப்புரைகளையும் ஆற்றுவர்.

இந்த நிகழ்வுகளிலே பொதுமக்களும் கலந்து சிறப்பிக்கலாம் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.