
அஸ்வெசும மூலம் வழங்கப்பட்ட பணத்தை எதற்காக செலவு செய்தார்கள் என மதிப்பாய்வு செய்ய நடவடிக்கை!
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவின் இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்ட பின்னர், அதற்காக சுமார் 4 இலட்சம் விண்ணப்பங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, 24 இலட்சம் பேருக்கு அஸ்வெசும கொடுப்பனவு வழங்கும் பணி நிறைவு செய்யப்பட உள்ளது.
ஆனால் கடந்த மே மாதம் முதல் அஸ்வெசும கொடுப்பனவு கோரி விண்ணப்பித்த 34 இலட்சம் பேர் குறித்து மீண்டும் மதிப்பாய்வு செய்யப்படும்.
மேலும், புதிதாக சமர்ப்பிக்கப்படும் 4 இலட்சம் விண்ணப்பங்கள் குறித்து முழுமையான கணக்கெடுப்பு நடத்தப்படும்.
இந்த கொடுப்பனவைப் பெறுவதற்கு தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையை மேலும் வலுப்படுத்த நாங்கள் அவ்வாறு செய்கிறோம்.
24 இலட்சம் பயனாளிகளைத் தேர்வு செய்த பிறகு, அவர்கள் தொடர்பில் தொடர்ந்தும் மீளாய்வு செய்ய எதிர்பார்க்கின்றோம்.
அஸ்வெசும மூலம் வழங்கப்பட்ட பணத்தை எதற்காக செலவு செய்தார்கள்? என்றும் இது எதிர்காலத்தில் வலுவூட்டும் திட்டத்திற்கு எந்த அளவிற்கு பங்களிப்பு செய்கின்றது என்றும் மதிப்பிடப்படவுள்ளன.
அத்துடன், இதன் ஊடாக அவர்களுக்கு என்ன பலன் கிடைத்தது என்பதில் சிறப்பு கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.