
உணவுப் பொதியில் பாடசாலை மாணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
கொழும்பு (Colombo) - ஜா எல (Ja-Ela) கல்வி வலயத்திற்குட்பட்ட ஜா எல நகர எல்லையில் இயங்கும் தேசிய பாடசாலை ஒன்றில் வழங்கப்பட்ட உணவுப் பொதியில் புழுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் நேற்று (06) இடம்பெற்றுள்ளது.
தரம் 1 முதல் தரம் 5 வரையான வகுப்புகளுக்கு அரசாங்கத்தின் அனுசரணையுடன் இலவசமாக வழங்கப்பட்ட உணவுப் பொதியில் இருந்த மீன் குழம்பிலேயே புழுக்கள் இருந்ததாக பெற்றோர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த தேசிய பாடசாலையில் 3ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் நேற்று (06) பாடசாலையில் வழங்கப்பட்ட உணவுப் பொதியை உண்ணாமல் தனது வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார்.
இந்நிலையில், வீட்டில் உணவுப் பொதியை திறந்து பார்த்தபோது, அதிலிருந்த மீன் குழம்பில் புழுக்கள் இருந்ததை அவதானித்த பெற்றோர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட பாடசாலை நிர்வாகத்துக்கு அறிவித்துள்ளனர்.
இதனை தொடர்பாக பாடசாலையின் அதிபரிடம் வினவியபோது, சம்பவம் குறித்து விசாரணைகளை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.