
யாழ். மக்களின் எதிர்ப்பால் மரத்தினை வெட்டும் பணியை நிறுத்த கோரிக்கை
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இந்து கல்லூரியின் வளாகத்தில் நிற்கும் மலைவேம்பு மரத்தை வெட்டுவதற்கு பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்புக்களை தொடர்ந்து நாளைய தினம் மரத்தினை வெட்டும் பணியை நிறுத்த அந்தப் பகுதிக்கான கிராம சேவகர் மற்றும் வலிகாமம் மேற்கு பிரதேச செயலர், மரக் கூட்டுத்தாபனம் ஆகியன அதிக கவனம் செலுத்தியுள்ளனர்.
இது குறித்து மேலும் தெரிவிக்கையில், குறித்த பாடசாலை வளாகத்தில் வீதியோரமாக மலைவேம்பு மரம் ஒன்று உள்ளது.
அந்த மரத்தில் உள்ள கொப்புக்களால் ஆபத்து என தெரிவித்து மரக் கூட்டுத்தாபனம் நேற்றையதினம் மரத்தின் கொப்புகளை வெட்டியுள்ளது.
அத்துடன் கொப்புகளை வெட்டுவதோடு மட்டுமல்லாமல் மரத்தையே அடியோடு வெட்டுவதற்கு நாளையதினம் மரக் கூட்டுத்தாபனம் வருகை தர உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து பெற்றோர் கருத்து தெரிவிக்கையில்,
குறித்த மரமானது பல்லாண்டு காலமாக பாடசாலைகளாகத்தில் நிற்கின்றது. மரத்தின் கொப்புகள் ஆபத்தை ஏற்படுத்தும் என்று நினைத்தால் குறித்த கொப்புகளை வெட்டலாம் ஆனால் மரத்தினை வெட்ட வேண்டிய தேவை இல்லை.
பயணிகளது நன்மை கருதி வீதிகளில் உள்ள மரங்களையே வெட்டாமல் வீதி அபிவிருத்தி பணிகள் இடம்பெறுகின்றன. இவ்வாறான சூழ்நிலையில் யாருக்கும் எந்தவிதமான பாதிப்பும் இல்லாத வகையில் பாடசாலை வளாகத்திற்குள் நிற்கின்ற நேரத்தை வெட்டுவதற்கான தேவை என்ன?
குறித்த மரம் நிற்கின்றதால் பேருந்துக்காக காத்திருக்கும் மாணவர்கள் மரநிழலில் நிற்கின்ற நிலைமைகளும் காணப்படுகின்றன.
அத்துடன் ஒட்சிசனை பெறுவதற்கும், வெப்பநிலையை சீர் செயாவதற்கும் குறித்த மரம் அளப்பரிய பங்காற்றுகின்றது. குறித்த மரத்தினை வெட்டுவதால், பாடசாலையில் கல்வி கற்கும் எமது பிள்ளைகளுக்கு தான் அதிகம் பாதிப்புகள் உள்ளன.