
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை
நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மின்னல் ஏற்படும் சாத்தியமுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், குருநாகல், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று நண்பகல் 12 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று இரவு 11.00 வரை குறித்த எச்சரிக்கை நடைமுறையில் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது
இதன் காரணமாக, மின்னலினால் ஏற்படும் ஆபத்துக்களை குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
அந்தவகையில், வீட்டிற்குள் இருப்பது சிறந்தது, மரங்களுக்கு அடியில் இருக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது நெல் வயல்கள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் நீர்நிலைகள் போன்ற திறந்தவெளிகளில் நிற்க வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தொலைபேசிகள் மற்றும் இணைக்கப்பட்ட மின்சார சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.