
நான்கு நாட்களில் மில்லியன் கணக்கில் வசூல் செய்த இ.போ.ச
கடந்த 4 நாட்களில் இலங்கை போக்குவரத்து சபை (Sri Lanka Transport Board), 600 மில்லியன் ரூபாயை வருமானமாக ஈட்டியுள்ளதாக அதன் பிரதிப் பொது முகாமையாளர் ஆர்.டி சந்திரசிறி (R.T. Chandrasiri) தெரிவித்துள்ளார்.
பண்டிகைக் காலத்தையொட்டி அதிகளவான பேருந்துகள் சேவையில் ஈடுபட்டமையினால் இந்த வருமானத்தை ஈட்ட முடிந்துள்ளது.
நாளொன்றுக்கு சுமார் 200 மில்லியன் ரூபாய் வரை வருமானமாக ஈட்ட முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த வருடம் தமிழ்,சிங்களப் புத்தாண்டையொட்டி பொதுமக்களின் வசதிக்காக சுமார் 350 பேருந்துகள் மேலதிகமாக இயக்கப்பட்டதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதிப் பொது முகாமையாளர் ஆர்.டி சந்திரசிறி மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு கொழும்பிலிருந்து (Colombo) 5 இலட்சம் பேர் வெளியேறியுள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, கடந்த 9 ஆம் திகதி முதல், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளில் சுமார் 500,000 பயணிகள் கொழும்பிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புத்தாண்டை முன்னிட்டு பிரயாணங்களை மேற்கொள்ளும் மக்களுக்காக நேற்று (13) மேலதிகமாக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.