
நீண்டதூரப் போக்குவரத்து சாரதிகள் குறித்து விசேட கவனம் செலுத்த தீர்மானம்
நீண்ட தூரப் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்து சாரதிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.
அண்மையில் றம்பொடை, கெரண்டி எல்ல அருகே நடைபெற்ற பேருந்து விபத்தின் பின்னர் இந்த விடயம் குறித்து தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டியதன் அவசியம் எழுந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
விபத்துக்குள்ளான கதிர்காமம்-குருநாகல் வழித்தடமானது நீண்ட நேரம் கொண்ட ஒரு போக்குவரத்து வழித்தடமாகும்.
அவ்வாறான வழித்தடங்களில் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படும் பேருந்துகளின் சாரதிகளுக்கு போதுமான ஓய்வு கிடைக்கின்றதா? ஒழுங்கான தூக்கம் கிடைக்கின்றதா? பயணத்தின் இடையில் அவர்களுக்கு சிறிதளவேனும் ஓய்வொன்றை எடுப்பதற்கான வசதிகள் உள்ளதா என்பது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டியிருப்பதாக கமல் அமரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் இரவுநேரப் பயணிகள் போக்குவரத்துச் சேவைகள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.