
பொலிஸாரை ஏமாற்றி குடும்ப பெண் அரங்கேற்றிய பெரும் நாடகம் ; தமிழர் பகுதியில் சம்பவம்
நகைகள் களவாடப்பட்டுள்ளதாக பொய் கூறி பொலிஸாரை ஏமாற்றி நாடகமாடிய பெண் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சம்பவம் அம்பாறையில் இடம்பெற்றுள்ளது.
கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடான்றில் சுமார் 45 இலட்சம் ரூபா பெறுமதியான நகைககள் களவாடப்பட்டுள்ளதாகவும் தனது கணவர் வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு திரும்பவுள்ள நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் 32 வயதுடைய குடும்பப்பெண் முறைப்பாட்டு செய்துள்ளார்.
குறித்த முறைப்பாட்டிற்கமைய நிந்தவூர் பொலிஸ் அதிகாரிகளால் விசாரணைகளும் தடயவியல் பொலிஸ் பிரிவால் தீவிர சோதனையும் மேற்கொண்டுள்ளன.
இருந்த போதிலும் குறித்த வீட்டில் களவாடப்பட்டற்கான சான்றுகளும் ஆதாரங்களும் கிடைக்கவில்லை. இந்நிலையில் சந்தேகமடைந்த பொலிஸார் பெண்ணிடத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதனடிப்படையில் கணவன் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக சென்ற நிலையில் தனியாக இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்த குறித்த பெண் தனது கையிருப்பில் இருந்த பணம் மற்றும் நகைகளை பல்வேறு தேவைகளுக்காக செலவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கணவன் திடீரென நாடு திரும்பவுள்ளதாக அப்பெண்ணிடம் குறிப்பிட்டுள்ளார். இதனால் சற்று பதற்றமடைந்த அப்பெண் 45 இலட்சம் ரூபா பெறுமதியான நகைககள் களவாடப்பட்டுள்ளதாக நாடகமாடியுள்ளார். மேலும் கல்முனை பகுதியில் உள்ள பிரபல நகையகத்திற்கு சென்று நகைகளை விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்ட அப்பெண், கைது செய்யப்பட்டு, சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது குறித்த பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
பின்னர் அப்பெண் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், கடும் தொனியில் சந்தேக நபரை எச்சரித்த நீதிபதி பிணையில் செல்ல உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.