யாழில் நேர்ந்த சோக சம்பவம் ; மாடியில் இருந்து கீழே விழுந்த நபர் உயிரிழப்பு
யாழில் வெற்றிலை துப்ப முயற்சித்த ஒருவர் மாடியில் இருந்து கீழே விழுந்த நிலையில் இன்றைய தினம் (31) உயிரிழந்துள்ளார்.
நீர்வேலி, அச்செழு பகுதியைச் சேர்ந்த சுப்பையா உதயராசா (வயது 56) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் கடந்த 22 ஆம் திகதி மேல் மாடியில் மேசன் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

இதன்போது மழை பெய்து கொண்டிருந்தது. இதன்போது இவர் வெற்றிலை துப்புவதற்காக கட்டடத்தின் முகப்பு பகுதிக்கு சென்றவேளை கால் தவறி கீழே விழுந்துள்ளார்.
இந்நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.