பாடசாலை விடுமுறை குறித்து வெளியான தகவல்

பாடசாலை விடுமுறை குறித்து வெளியான தகவல்

நாடளாவிய ரீதியில் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு நாளை (23) முதல் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு (Ministry of Education) அறிவித்துள்ளது.

நீண்ட விடுமுறைக்கு பின்னர் கடந்த 16 ஆம் திகதி மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டத்திற்காக திறக்கப்பட்ட பாடசாலைகளுக்கு நாளை முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது.

இந்த நிலையில் மூன்றாம் தவணையின் மூன்றாம் கட்டம் 29ஆம் திகதி ஆரம்பமாகி 31ஆம் திகதி வரை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் கடந்த 16ஆம் திகதி ஆரம்பமாகி ஜனவரி 2ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள நிலையில் டிசம்பர் 27 (சனிக்கிழமையும்) கற்றல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை விடுமுறை குறித்து வெளியான தகவல் | School Holiday Announcement Ministry Of Education

இம்முறை மூன்றாம் தவணை பரீட்சைகள் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள  மாணவர்களுக்கு ஜனவரி மாதத்தில் பரீட்சைகளை நடத்துவது பொருத்தமானது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளில் 2026 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணையின் முதலாம் கட்டம் ஜனவரி 5 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை இடம்பெறும்.

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சையை முன்னிட்டு ஜனவரி பத்தாம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை மீண்டும் விடுமுறை வழங்கப்பட்டு இரண்டாம் கட்டமானது ஜனவரி 21 முதல் பெப்ரவரி 13 வரை இடம்பெறும்.

இதனைத் தொடர்ந்து இவ்வாண்டுக்கான க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்காக பெப்ரவரி 14 ஆம் திகதி முதல் மார்ச் இரண்டாம் திகதி வரை விடுமுறை வழங்கப்படும்.

மூன்றாம் கட்டம் மார்ச் மூன்றாம் திகதி முதல் ஏப்ரல் பத்தாம் திகதி வரை இடம்பெறும் அத்தோடு ஏப்ரல் 11ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படும்.

பாடசாலை விடுமுறை குறித்து வெளியான தகவல் | School Holiday Announcement Ministry Of Education

முஸ்லிம் பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்டம் ஜனவரி முதலாம் திகதி முதல் ஒன்பதாம் திகதி வரை இடம்பெறும். உயர்தர பரீட்சைகளை முன்னிட்டு ஜனவரி பத்தாம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படும். இரண்டாம் கட்டம் ஜனவரி 21 முதல் பெப்ரவரி 13 வரை இடம்பெறும்.

சாதாரண தர பரீட்சை மற்றும் ரமழான் நோன்பினை முன்னிட்டு பெப்ரவரி 14ஆம் திகதி முதல் மார்ச் 22ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படும். மூன்றாம் கட்டம் மார்ச் 23 முதல் ஏப்ரல் பத்தாம் திகதி வரை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.