இரு நிதி நிறுவனங்களுக்கு மத்திய வங்கி விடுத்துள்ள அறிவிப்பு
இலங்கை மத்திய வங்கியால் அனுமதியளிக்கப்படாத நிதி நிறுவனங்களில் வைப்பிலிடப்பட்ட பணத்தை மீள செலுத்துமாறு மத்திய வங்கி குறித்த நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளது.
2011 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க நிதிச் சேவைகள் சட்டத்தின் பிரிவு 42 இன் கீழ் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து இலங்கை மத்திய வங்கி இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
மாலன் பெர்னாண்டோ இன்டர்நேஷனல் பாரெக்ஸ் எக்ஸ்சேஞ்ச் யூனிட் (பிரைவேட்) லிமிடெட் மற்றும் குருகுலசூரிய பெர்மிமலன் பெர்னாண்டோ ஆகியவை நிதிச் சேவைகள் சட்டத்தை மீறி பண வைப்புத் தொகைகளை ஏற்றுக் கொண்டதாக மத்திய வங்கி கூறுகிறது.
நிதிச் சேவைகள் சட்டத்தின் பிரிவு 42(10) இன் கீழ் பொது நலனுக்காக மத்திய வங்கி பொது மக்களுக்கு இது குறித்து அறிவித்துள்ளது.

அதன்படி, உறுதிமொழி பத்திரங்களை வழங்குவதன் மூலமாகவோ அல்லது வேறு எந்த வகையிலோ பொதுமக்களிடமிருந்து வைப்புத் தொகைகளை ஏற்க முடியாது என்று இலங்கை மத்திய வங்கி சம்பந்தப்பட்ட நிறுவனம் மற்றும் தனிநபருக்கு அறிவுறுத்தியுள்ளது.
மேலும் நிறுவனம் மற்றும் தனிநபர் வைத்திருக்கும் அனைத்து வைப்புப் பணங்களையும் வைப்பாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் மத்திய வங்கி அறிவித்துள்ளது.