மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல் : இன்று முதல் நடைமுறைக்கு வரும் சேவை
பொருளாதார ரீதியாக இலாபமற்ற கிராமிய வீதிகளில் இன்று (01) முதல் பேருந்து சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு (Ministry of Transport and Highways) தெரிவித்துள்ளது.
போக்குவரத்து சிரமங்களை எதிர்நோக்கும் பொதுமக்களின் வசதிக்காக, இந்த சேவை முன்னெடுக்கப்படுவதுடன், பாதீட்டு முன்மொழிவின் கீழ் இதற்காக 2000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
சிசு செரிய, கெமி செரிய மற்றும் நிசி செரிய ஆகிய திட்டங்களுக்காக ஏற்கனவே ஒதுக்கப்பட்ட 3,300 மில்லியன் ரூபாய்க்கு மேலதிகமாக இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக, இதுவரை பேருந்து சேவைகள் இல்லாத 40 இலாபமற்ற கிராமிய வீதிகளில் இன்று (1) முதல் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.