இடியுடன் கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கைக்கு கிழக்கே வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் ஒரு தளம்பல் நிலை உருவாகி வருவதால், நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவும் மழை நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (2.1.2026) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும்.
மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகளவில் பலத்த மழை பெய்யக்கூடும்.

ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதேவேளை மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளிலும் காலை வேளையில் சிறு அளவில் மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் அதிகாலை வேளையில் மூடுபனி நிலவும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதாலும், மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என்பதாலும், அவற்றினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.