மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

 அடுத்த மூன்று மாதங்களுக்கு மின் கட்டணத்தை 11.5 சதவீதத்தினால் உயர்த்த இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளதாக, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு இலங்கை மின்சாரசபையினால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவின் படி இந்த விடயத்தை குறிப்பிடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

டித்வா புயலினால் (Cyclonic Storm Ditwah) ஏற்படுத்திய பாதிப்புகளால், நாட்டின் சுமார் 35 சதவீத மக்கள் தினமும் மூன்று வேளை உணவைப் பெறுவதற்கே சிரமப்படும் நிலையில், இந்த மின் கட்டண உயர்வு முன்மொழியப்பட்டிருப்பது நியாயமற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பல்வேறு நிறுவனங்களின் மதிப்பீட்டின்படி, புயலால் நாட்டுக்கு ஏற்பட்ட மொத்த சேதம் அமெரிக்க டொலர் 5 முதல் 6 பில்லியன் வரை உள்ளதாகவும், அதில் மின்சார சபைக்கு மட்டும் 20 பில்லியன் ரூபா அளவிலான இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2026 ஆம் ஆண்டுக்கான சர்வதேச நாணய நிதியம் (IMF) வெளியிட்ட மொத்த தேசிய உற்பத்தி வளர்ச்சி கணிப்புகளை அடிப்படையாகக் கொண்டு மின் கட்டண திருத்தம் நியாயப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான தகவல் | Electricity Tariffs To Rise 11 5 Percent

கடந்த ஆண்டு இலங்கை மின்சார சபையின் மொத்த வருமானம் சுமார் 470 பில்லியன் ரூபா எனவும் அவர் கூறியுள்ளார்.

அண்மைய மின் கட்டண திருத்தத்தின் மூலம், இலங்க மின்சாரசபை தனது அறிவிக்கப்பட்ட இழப்புகளில் சுமார் 60 சதவீதத்தை நுகர்வோரிடமிருந்து மீட்டெடுக்க முயற்சிக்கிறது என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதன் அடிப்படையில், அடுத்த மூன்று மாதங்களில் மட்டும் 7 பில்லியன் ரூபா அளவிலான தொகை மின்சார பயனர்களிடமிருந்து வசூலிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

இயற்கை பேரழிவால் ஏற்பட்ட இழப்புகளை நேரடியாக மக்களின் மீது சுமத்த முயற்சிக்கும் நாட்டின் ஒரே நிறுவனம் இலங்கை மின்சார சபையாக இருக்கலாம் எனவும், இது முற்றிலும் நியாயமற்ற செயல் எனவும் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மின்சாரசபைக்கு எற்பட்ட இழப்புகளை அரசே ஏற்க வேண்டும்; பொதுமக்கள் மீது சுமத்தக்கூடாது,” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான தகவல் | Electricity Tariffs To Rise 11 5 Percent

மேலும், இன்னும் சில பகுதிகளில் மின்சாரம் முழுமையாக வழங்கப்படாத நிலையிலும் கட்டண உயர்வு முன்மொழியப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மைக் காலமாக கனமழை பெய்துவரும் நிலையில், மின்சார உற்பத்தியின் சுமார் 60 சதவீதம் இன்னும் அனல் மின் நிலையங்களின் மூலம் மேற்கொள்ளப்படுவதாக இலங்கை மின்சாரசபை தெரிவித்திருப்பதும், மின் கட்டண உயர்வின் நியாயத்தன்மை குறித்து சந்தேகம் எழுப்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை, இந்த தகவல் குறித்து இலங்கை மின்சார சபையோ அல்லது பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவோ இதுவரையில் அதிகாரபூர்வ அறிவிப்பு எதனயும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.