விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள்!
பெரும்போக அறுவடை மற்றும் சிறு போகச் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு தடையின்றி எரிபொருளைப் பெற்றுக்கொடுக்கும் விசேட வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் சுமித் சந்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
விவசாய சேவை நிலையங்கள் ஊடாகத் தயாரிக்கப்பட்ட தகுதியுள்ள விவசாயிகளின் விபரங்கள் ஏற்கனவே எரிசக்தி அமைச்சுக்கு வழங்கப்பட்டு, அங்கிருந்து அந்தந்த எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
எரிபொருள் நிலையங்களில் தற்போது கடும் நெரிசல் காணப்படுவதால், விவசாய நடவடிக்கைகளுக்காக வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு அனைத்து எரிபொருள் நிலைய உரிமையாளர்களுக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விவசாயத் திணைக்களத்தின் பரிந்துரைப்படி, அறுவடை நடவடிக்கைகளுக்கு ஒரு ஏக்கருக்கு 15 லீற்றர், நிலம் பண்படுத்தல் (உழுதல்) பணிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 30 லீற்றர் என்ற அளவில் எரிபொருள் வழங்கப்படவுள்ளது.
விவசாயிகள் தமக்கு மிக அருகிலுள்ள அல்லது இலகுவான எரிபொருள் நிலையங்களில் எரிபொருளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் இந்தப் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.