மந்திகை வைத்தியசாலையில் நிலவிய பதற்ற நிலை வழமைக்கு...!

மந்திகை வைத்தியசாலையில் நிலவிய பதற்ற நிலை வழமைக்கு...!

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை - மந்திகை வைத்தியசாலையில் மருத்துவர்களுக்கும் பொது மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்தர்க்கம் காரணமாக குழப்ப நிலை நிலவியுள்ளது.

இந்த சம்பவம் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

நெல்லியடி நகரில் தொழில் புரிந்து வந்த 24 வயதுடைய நரேஷ் என்ற இளைஞர் திடீரென மயக்கமடைந்த நிலையில் நோயாளர் காவு வண்டியினூடாக அவர் மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞரை சிகிச்சைக்குட்படுத்திய வைத்தியர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என அறிவித்துள்ளனர்.

இதன்பின்னர் அவரின் சடலம் பிரேத அறைக்கு மாற்றப்பட்டுள்ளது.

எனினும் குறித்த இளைஞர் உயிருடனே இருக்கின்றார் என உறவினர்கள் பொது மக்கள் தெரிவித்ததோடு அவரை மீண்டும் சாதாரண நோயாளர் அறைக்கு மாற்றி சிகிச்சையளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்போது மீண்டும் சிகிச்சைக்குட்படுத்திய வைத்தியர்கள் அவர் உயிரிழந்துள்ளமையை உறுதி செய்துள்ளனர்.

இந்நிலையில் உறவினர்களுக்கும் மருந்தாளர்களுக்கும் இடையில் குழப்ப நிலை ஏற்பட்டதையடுத்து காவல் துறையினரை  சம்பவ இடத்திற்கு வரவழைத்து நிலைமையை வழமைக்கு கொண்டுவந்துள்ளனர்.