எனது ஆட்சியில் பாதுகாப்பு விடயங்களில் சமரசத்துக்கு இடமில்லை- பிரதமர் மோடி

எனது ஆட்சியில் பாதுகாப்பு விடயங்களில் சமரசத்துக்கு இடமில்லை- பிரதமர் மோடி

காங்கிரஸ் ஆட்சியில் பாதுகாப்பு விடயங்களில் சமரசம் செய்யப்பட்டது எனவும் தனது அரசு நாட்டைப் பாதுகாப்பதில் கூடுதல் அக்கறையும் முக்கியத்துவும் அளிக்கிறது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இமாச்சலப் பிரதேசத்தில் மணாலி-லே இடையே அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே மிக நீளமான ‘அடல்’ சுரங்கப் பாதையை பிரமதர் மோடி இன்று (சனிக்கிழமை) திறந்து வைத்து உரையாற்றியபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் உரையாற்றுகையில், “மத்தியில் பத்து ஆண்டுகளில் ஒரு கட்சி ஆண்டபோது ‘அடல்’ சுரங்கப்பாதை முதல் லடாக்கில் உள்ள தவுலத் ஒல்டி விமானப்படைத் தளம்,  தேஜாஸ் விமானத் தயாரிப்பு வரை அனைத்தும் தாமதிக்கப்பட்டன, மறக்கப்பட்டன.

இந்தத் திட்டங்கள் தாமதப்படுத்தப்பட்டதற்கும் மறக்கப்பட்டதற்கும் பின்புலத்தில் இருந்த அழுத்தம் என்ன?

என்னுடைய அரசு, எல்லையில் கட்டமைப்பை வலுப்படுத்தத் தேவையான அனைத்து வலிமையான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதுடன் எல்லையில் சாலைகள், பாலங்கள், சுரங்கப் பாதைகளை அமைத்துள்ளது. இதற்கு முன்பு எல்லைப் பகுதியில் அமைக்கப்படுவதற்காகப் போடப்படும் திட்டங்கள் அனைத்தும் காகிதத்திலேயே இருந்தன.

அடல் பிஹாரி வாஜ்பாய் கடந்த 2002ஆம் ஆண்டு இந்தச் சுரங்கப்பாதைக்கு அடிக்கல் நாட்டினார். அடுத்த ஆட்சிக்கு வந்தவர்கள் இந்தத் திட்டத்தையே மறந்துவிட்டார்கள். கடந்த 2013-2014 ஆம் ஆண்டில் ஆயிரத்து 300 மீட்டருக்கு மட்டுமே பணிகள் நடந்தன. அப்படியே சென்றிருந்தால் 2040ஆம் ஆண்டில்தான் இந்தத் திட்டம் முடிந்திருக்கும்.

ஆனால், 2014ஆம் ஆண்டில் என்னுடைய தலைமையில் ஆட்சிக்கு வந்தபின்னர் இந்தத் திட்டம் வேகமெடுத்து ஆண்டுக்கு 300 மீட்டர் என்பதிலிருந்து ஆயிரத்து 400 மீட்டர் பணிகள் முடிக்கப்பட்டு 2020ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்துள்ளது.

26 ஆண்டுகள் நடக்கவேண்டிய பணிகளை என்னுடைய அரசு வெறும் 6 ஆண்டுகளில் முடித்துள்ளது. இதுமட்டுமல்லாது தவுலத் பெக் விமானப் பாதையும் கடந்த 40 ஆண்டுகளாக முடிக்காமல் இருந்தது.

நான் சொல்லக்கூடிய 12இற்கும் மேற்பட்ட திட்டங்கள் அனைத்தும் இராஜாங்க ரீதியில் முக்கியமான திட்டங்களாகும். ஆனால், பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு இருந்தன.

இதேவேளை, பாதுகாப்பு விடயங்களில் முன்னைய அட்சியில் சமரசம் செய்யப்பட்டது. ஆனால், என்னுடைய ஆட்சியில் பாதுகாப்புத் துறைக்கும் நாட்டின் நலனுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

தேசிய நலனை விடவும் தேசத்தைப் பாதுகாப்பதை விடவும் எங்களுக்கு எதுவும் முக்கியத்துவம் வாய்ந்தது இல்லை. ஆனால், தேசத்தின் நலன் புறக்கணிப்பட்டதையும் சமரசம் செய்யப்பட்ட காலத்தையும் தேசம் பார்த்துள்ளது.

பாதுகாப்புத் துறையில் பல சீர்திருத்தங்களை அரசு கொண்டுவந்துள்ளது. உள்நாட்டிலேயே தளவாடங்கள் தயாரிக்கவும் தேவையை நிறைவு செய்யவும் முன்னுரிமை அளிக்கப்படும்“ என்று மோடி குறிப்பிட்டார்.