கேகாலை நகர சபையில் தீயணைப்பு வாகனங்கள் இல்லை- வியாபாரிகள் குற்றச்சாட்டு
கேகாலை நகரில் உள்ள பொது வர்த்தக கட்டிட தொகுதியில் ஏற்பட்ட தீயினை கட்டுப்படுத்துவதற்கு கேகாலை நகர சபையில் தீயணைப்பு வாகனங்கள் இல்லை என அந்த கட்டிட தொகுதியின் வியாபாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். குறித்த வர்த்தகதொகுதியில் 70 இற்கும் அதிகமான வர்த்தக நிலையங்கள் உள்ளன.
இந்த நிலையில் நேற்று ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக அவற்றில் 56 வர்த்தக நிலையங்கள் முற்றில் சேதமடைந்துள்ளதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். கேகாலை நகரில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான வர்த்தக நிலையங்கள் உள்ள நிலையில் தீப்பரவலுக்கு முன்னர் அந்த பகுதியில் மின்சாரம் தடைப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் மீண்டும் மின்சாரம் வந்தபோது ஒரு வர்த்தக தொகுதியில் தீப்பரவல் ஏற்பட்டதுடன் அது பின்னர் ஏனைய வர்த்தக நிலையங்களுக்கும் பரவியதாகவும் குறிப்பிடப்படுகிறது. இதனையடுத்து தீயணைப்பிற்காக குருநாகல் மற்றும் கண்டி மாநாகர சபைகளின் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயணைப்பு பணிகளில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.