நவீன கருவியுடன் புதையல் தோண்டிய 6 பேர் கைது

நவீன கருவியுடன் புதையல் தோண்டிய 6 பேர் கைது

மன்னார் பேசாலை யூட்ஸ் வீதி பற்றைக் காட்டுப் பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இவர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட நவீன கருவி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை இரவு 9 மணியளவில் குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுவதாக பேசாலை பதில் காவல்நிலைய பொறுப்பதிகாரிக்குக் தகவல் கிடைத்துள்ளது.

இதன்போது, சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 4 நபர்களும் பேசாலை காவற்துறைக்குட்பட்ட நடுக்குடா மற்றும் வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 2 நபர்களும் பேசாலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதோடு, அவர்களிடம் இருந்து நவீன கருவி ஒன்றையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த 6 நபர்களும் பேசாலை காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மன்னார் பதில் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதனையடுத்து குறித்த 6 பேருக்கும் பிணை வழங்குவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.