கொரோனா தொற்றுக்குள்ளான யாழ்-புங்குடுதீவு பெண் தொடர்பில் வெளியான தகவல்கள்

கொரோனா தொற்றுக்குள்ளான யாழ்-புங்குடுதீவு பெண் தொடர்பில் வெளியான தகவல்கள்

கொவிட்-19 பாதுகாப்பு சுகாதார நடைமுறைகளை பொதுமக்கள் மிகவும் இறுக்கமாக பின்பற்ற வேண்டும் என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த பயண ஒழுங்குகளை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் கேதீஸ்வரன் வெளியிட்டுள்ளார்.

குறித்த பெண் பயணம் செய்த பேருந்துகள் தொடர்பான விபரங்களை அவர் வெளியிட்டார்.

கொரோனா பாதித்த புங்குடுதீவுப் பெண் கொழும்பிலிருந்து பயணித்த பேருந்து, புத்தளம் பகுதியில் பழுதடைந்துள்ளது. அதனால் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.30 புத்தளம் பகுதியிலிருந்து அந்தப் பெண் பருத்தித்துறை சாலைக்குச் சொந்தமான பேருந்தில் பயணித்துள்ளார். அவர் கொடிகாமத்தில் காலை 4.30 இறங்கிவிடப்பட்டுள்ளார்.

பின்னர் வேறொரு பேருந்தில் அந்தப் பெண் யாழ்ப்பாணம் நகருக்கு பயணித்துள்ளார்.

கொழும்பு - பருத்தித்துறை சேவையில் ஈடுபட்ட பேருந்தில் பணியாற்றிய நடத்துனர் மற்றும் நடத்துனர் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் இனங்காணப்பட்டு சுயதனிமைப்படுதலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

எனவே குறித்த இரண்டு பேருந்துகளிலும் பயணித்தவர்கள் உடனடியாக வடமாகாண சுகாதார திணைக்களத்தின் 021 222 6666 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கோரியுள்ளார்.