பெட்ரோலை 131 ரூபாவால் உடனடியாக குறைக்க முடியும் - தரவுகளுடன் அம்பலப்படுத்திய கம்மன்பில
அரசாங்கத்தின் அண்மைய எரிபொருள் விலை குறைப்பை "மக்களை ஏமாற்றும் நடவடிக்கை" என பிவிதுறு ஹெல உருமய கட்சியின் தலைவர் சட்டத்தரணி உதய கம்மன்பில குற்றம்சாட்டியுள்ளார்.
மன்னார் படுகையில் உள்ள எண்ணெய் மற்றும் இயற்கை எரிவள அகழ்வாராய்ச்சி திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது என்பதற்கும் அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
பிவிதுறு ஹெல உருமய கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் எரிபொருள் விலை
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:- "2026 பெப்ரவரி 28 அன்று ஈரான் போர் தொடங்கும் போது, கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 72.87 டொலராகக் காணப்பட்டது.

ஜூன் 29 அன்று இலங்கையில் எரிபொருள் விலை மாற்றப்பட்ட போது, அதன் விலை 72.55 டொலராகக் குறைவடைந்துள்ளது. உலக சந்தையில் விலை குறைந்துள்ளதால் அரசால் போருக்கு முந்தைய விலையிலோ அல்லது அதைவிடக் குறைவான விலையிலோ எரிபொருளை வழங்க முடியும்.
போருக்கு முன் 293 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் ஒன்று தற்போது 20 ரூபா குறைக்கப்பட்டு 414 ரூபாவுக்கு விற்கப்படுகின்றது.
இது இன்னும் 131 ரூபாவால் குறைக்கப்பட வேண்டும். அதேபோல், 281 ரூபாவாக இருந்த ஒட்டோ டீசல் 25 ரூபா குறைக்கப்பட்டு 382 ரூபாவுக்கு விற்கப்படுவதால், அது இன்னும் 101 ரூபாவினாலும் குறைக்கப்பட வேண்டும்.
இதேபோல் ஒக்டேன் 95 பெற்றோல் 155 ரூபாவினாலும், சுப்பர் டீசல் 149 ரூபாவினாலும் குறைக்கப்பட வேண்டும்.
எண்ணெய் அகழ்வாராய்ச்சிப் பணிகள்
அதிக விலைக்கு வாங்கிய எரிபொருள் இருப்பில் இருப்பதாக அரசு கூறும் காரணம் முற்றிலும் பொய்யானதாகும்.
கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதியன்று மத்திய கிழக்கு போர் தொடங்கிய போது, தன்னிடம் 35 நாள்களுக்குத் தேவையான எரிபொருள் இருப்பதாகக் கூறிய அரசு, போர் தொடங்கி 12 நாள்களுக்குள் விலையை ஏற்றியது.

ஆனால், இப்போது உலகச் சந்தையில் விலை குறைந்து இரண்டு வாரங்கள் கடந்தும் அதன் பயனை மக்களுக்கு வழங்க மறுக்கின்றது.
உலகிலேயே அதிக விலைக்கு எரிபொருளை வாங்கியதன் மூலம் பெறப்பட்ட இடைத்தரகுப் பண ஊழலை மறைப்பதற்கே அரசு இவ்வாறு செய்கின்றது.
அத்துடன், இலங்கையின் பொருளாதார தற்சார்புக்கு மிக முக்கியமானதாகக் கருதப்பட்ட எமது நாட்டு எண்ணெய் அகழ்வாராய்ச்சிப் பணிகள் தற்போதைய அரசால் நிறுத்தப்பட்டது ஏன்?" - என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.