
மிகவும் கலைக்கிடமானது! இந்துக்களுக்காக இதனை செய்யுங்கள்: பாக்கியம் கிட்டும்- அம்பிட்டிய சுமணரட்ன தேரர் வேண்டுகோள்
பாத யாத்திரைகை செல்லும் இந்துக்களுக்காக ஜனாதிபதியும் பாதுகாப்புத் தரப்பினரும் உடனடியாக செயல்பட வேண்டும் என மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகாரை விகாராதிபதி அம்பிட்டிய சுமணரட்ன தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகாரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது பேசிய அவர்,
கதிர்காம உற்சவம் தற்போது ஆரம்பமாகியுள்ளது. இந்து பௌத்த மக்கள் ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்வதற்கான இடமாக கதிர்காமம் அமைந்துள்ளது.
எனவே யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா , திருகோணமலை மற்றும் கிழக்கு மாகாணத்தில் சகல பிரதேசங்களிலிருந்து எமது இந்து மக்கள் கதிர்காமத்திற்கு நடந்து செல்கின்றார்கள்.
அவர்கள் நேத்திக்கடன்களை வைத்து அவற்றை நிறைவேற்றுதற்காக செல்கின்றார்கள். ஆனால் இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள கொரோனா நிலையின் காரணமாக பயபக்தியுடன் இப்புனித பாதயாத்திரையை மேற்கொண்ட இந்து மக்களுக்கு இன்று நடந்து கதிர்காமம் செல்லமுடியாத நிலையில் நிர்க்கதியாக இடைநடுவில் நிற்கின்றனர்.
அவர்கள் தமது பெற்றோர், குழந்தைகள், சொத்துக்களை விட்டுவிட்டு மீண்டும் திரும்பி வருவோமா? என எதிர்பார்ப்பில்லாமல் காட்டுவழியினூடாக இப்பயணத்தை எதிர் கொள்வார்கள். அவ்வாறு இன்று கூறிவிட்டு புறப்பட்ட இவர்களுக்கு அவ்வாறு செல்லமுடியாது இடையில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது மிகவும் கலைக்கிடமானது.
எனவே இவர்களுக்காக ஜனாதிபதி, அரசும் பாதுகாப்பு துறையினரும் இது தொடர்பாக மேலான கவனத்தை செலுத்தி, நடந்து சென்று இவர்கள் கதிர்காமத்தில் தரித்திருக்காமல் தங்களது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றிவிட்டு உடனே மீண்டும் திரும்புவதற்கான சூழலை ஏற்படுத்தி கொடுத்தால் அவர்கள் அவ்வாறன நிலையிலிருந்து விடுபட்டு இறைவனுடைய ஆசிர்வாதத்தை பெறும் பாக்கியம் கிட்டும்.
இதனை நான் ஒரு செய்தியாக வெளியிடுகின்றேன். விசேடமாக இதற்கு நிறைய இந்து மக்கள் கால்நடையாக செல்ல முடியாமையினால் என்னுடைய விகாரைக்கு சமூகமளித்து இதனை ஜனாதிபதியிடம் முன்வைத்து தங்களது நேர்த்திகடனை முடித்துவிட்டு திரும்புவதற்கு கேட்டுக்கொண்டனர்.
எனவே பாதுகாப்பு துறையினர் எமது இந்து மக்களுக்கு பாதுகாப்பை வழங்கி அவர்கள் மீண்டும் திரும்பிவர உதவுவார்கள் என நாம் மிகவும் நம்புகின்றேன் என்றார்.